(Source: semparuthi.com) சிலாங்கூர் மாநில அரசின் இந்தியர் பண்பாட்டு மையத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும், அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இதன் காணொளியை பார்வையிட இங்கே சொடுக்கவும்.
தேசிய முன்னணி காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு முடக்கப்பட்ட மூன்று இனங்களுக்குமான பண்பாட்டு மையங்களை செயாலாக்கம் காண 2009-ஆம் ஆண்டிலேயே விவாதிக்கப்பட்டதாகவும் அது சார்பாக சரியான நிலங்களை அடையாளம் காண்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறிய சேவியர், இதற்காக தற்போது 6 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியர் பண்பாட்டு மையத்திற்கு 2 கோடி வழங்கப்படும் என்றார்.
“இதை முழுமையாக மாநில அரசால் செய்ய இயலாது. கண்டிப்பாக இந்திய சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை” என்றவர், இதற்கான ஒரு ஆரம்பச் செயல்திட்ட குழுவை அமைத்துள்ளதாகவும் அதை பொறியிலாளரும் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம் அவர்கள் ஒருங்கிணைத்து செயலாற்றுவதாகவும் கூறினார். இதில் கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மற்றும் செனட்டர் இராமகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கிள்ளான் KTM ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் புக்கிட் ஜாத்தி சாலை முடிவில், கிள்ளான் நதிக்கரையை ஒட்டி இந்த மையம் அமையயுள்ளது.
“இது மலேசிய இந்தியர்களின் செழிப்பான பண்பாட்டு கூறுகளை முன்கொணர்ந்து சமூக செயலாக்கத்திற்கு வித்திடும் விவேகத்தை கொண்டிருப்பதோடு இது கிள்ளான் நதிக்கரையில் நீரின் மேற்பரப்பிலேயே அமையவுள்ளதானது சிறப்பம்சம் என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
“மேலும், இது நமது வரலாற்றை பிரதிநிதிக்கும் அடையாளத்தூண், அரும்பொருட்காட்சியகம், நூலகம், கலையரங்கம், கலை பயிற்றுமையம், பண்பாட்டு நிகழ்வரங்கம் மற்றும் வாணிபம், விற்பனை, தங்கும் விடுதிகள் போன்றவையுடன் ஒரு முழுமையான தளமாக அமையும். நமது பாரம்பரிய வரலாறு, வாழ்வியல், சமூக கட்டமைப்பு, சமயம், கலை, மொழி, இயல், இசை, நாடகம், நடனம், உணவு, ஓவியம், சிற்பம் ஆகியவற்றின் அறிவு சார்ந்த வெளிப்பாடாக அமைய வேண்டும் என்கிறார் ஆறுமுகம்.
இந்த பண்பாட்டு மையங்களின் வரைபட கண்காட்சி கடந்த  ஜூன் 28, 29. 30-ஆம் தேதிகளில் பண்டார் பாரு கிள்ளான் இயோன் வாணிப அங்காடியில் நடைபெற்றது. அதன் தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும்.
இந்த பண்பாட்டு மையம் சார்பாக கருத்து சேகரிப்பும் நிகழ்வதாக கூறிய சேவியர் ஜெயகுமார், மக்களின் ஆக்ககரமான கருத்துக்களை மாநில அரசு வரவேற்பதாக கூறினார். தங்களது கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர், தொலைநகல் எண் +603 5510 6678 வழியாகவும், மின் அஞ்சல் முகவரிiccselangorku@gmail.com வழியாகவும் இவ்வருட இறுதிக்குள் அனுப்பலாம்.

0 comments:

top